திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 2ஆம் தேதி மகா தீபத்திருவிழா நடக்கிறது. 10 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தீப திருவிழா பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக போற்றப்படுகிறது திருவண்ணாமலை.
திருவிழாவில் 9 ஆயிரத்து 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வனத்துறை சார்பில் 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தீபத்திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் 10 சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2 மதுக்கடைகளுக்கு 10 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பேருந்துநிலையம் மற்றும் தேனிமலையில் உள்ள மதுக்கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.