திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) தொடங்கப்படுகின்றன.
தொகுதி 4-ல் அடங்கிய பல்வேறு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படுகிறது.
இதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். வணிகவரித் துறை உதவி ஆணையர் மணிமொழியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கிறார். தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை வரை இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் நாளான 2018 பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.