கார்த்திகை தீபத்திருவிழா 6-ம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதிஉலா

0
4718

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-வது நாளான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும், அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடந்தது. நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர் உள்பட 63 நாயன்மார்களை மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியை சுற்றி வந்தனர். மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here