ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.
ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். ‘ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனால் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ அப்லோடு செய்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களை பெற்றது. கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர்.
தற்போது கூகுள் தேடலில் பிரபலமாகி உள்ள பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை அடுத்து அதிகம் தேடப்பட்டவர் பிரியா வாரியர்தான்.
இந்நிலையில் பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஹைதராபாத்தின் பலுக்நுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்யா மலரய்ய பூவி பாடலின் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது.
இந்த வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர்களின் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.