சென்னை,
நேற்று நள்ளிரவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-
என்னை வளர்த்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியை தாண்டி கடமைகள் நிறைய இருக்கின்றன. அந்த கடமைகளின் தொடக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் அரசியல் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து பிப்ரவரி 21-ந் தேதி தொடங்க இருக்கிறேன். அன்று கட்சி பெயரை அறிவிக்கிறேன்.
ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன். இது நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சி கழகமோ அல்ல. என் புரிதல், எனக்கான கல்வி.
ஜனநாயகம்
இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழி நடத்த மாத்திரமன்று. பின் பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமை பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்த தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
களத்தில் சந்திப்போம்
இது ஆட்சியை பிடிப்பதற்கான திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு. அப்படி என்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம் இது. உங்களின் ஆதரவோடு இந்த பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.